தீவிரவாதத் தொடர்பு என்பதால் கேரள அரசுக்கு சிக்கல்
திருவனந்தபுரம்: கேரள அரசாங்கத்தை சிக்கலில் தவிக்க விட்டிருக்கும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசுகள் (யுஏஇ) தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்த முயன்றது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு கொச்சி தேசிய குற்றப் புலனாய்வு முகவை (என்ஐஏ) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருவரையும் ஏழு நாள்கள் என்ஐஏ கட்டுப்பாட்டில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக என்ஐஏ தாக்கல் செய்த மனுவில், “இவர்கள் தங்கம் கடத்தியது நகைகளுக்காக அல்ல. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வதற்காகத்தான்,” எனக் கூறியுள்ளது. மேலும், “யுஏஇ தூதரகத்தின் முத்திரையையும் சின்னத்தையும் போலியாகத் தயாரித்து, பயன்படுத்தித்தான் இவர்கள் தங்கம் கடத்தியுள்ளனர்,” என என்ஐஏ கூறியுள்ளது.
பெங்களூரில் சந்தீப் நாயரை கைது செய்தபோது அவரிட
மிருந்து ஒரு கைப்பையை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதனை அதிகாரிகள் திறந்து பார்க்கவில்லை. தங்கம் கடத்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் அந்தப் பையில் இருக்க வாய்ப்பு உள்ளதால் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முன்னிலையில் அதனைத் திறக்கவேண்டும் என என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவரது அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.