திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு சிற்றரசு தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த அரபு பிரதிநிதி ரஷீத் கமிஸ் அலி என்பவர் திடீர் என்று இந்தியாவிலிருந்து வெளியேறி தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார். அரபு அரசாங்கம் அவரைத் திரும்ப அழைத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.
தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்த இந்திய வெளியுறவு அமைச்சு தயாராகி வந்தது. தற்போது அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷுடன் ரஷீத் கமிஸ் அடிக்கடி கைபேசியில் பேசியது உறுதியான நிலையில் தப்பிச் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது குறித்து தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக, தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாவலர் ஜெயகோஷ் என்பவரை திடீர் என்று காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்க கடத்தல் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கோஷுக்கு மிரட்டல் வந்ததாகவும் அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையச் செய்தி குறிப்பிட்டது. மாயமாகும் முன்னர் தமது கைத்துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக அவரது மைத்துனர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தகவல் தொடர்புத் துறைச் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னர் முதல்வரின் முதன்மைச் செயலர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மிர் முகமது நியமிக்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசு தூதரகத்தின் பெயரில் இம்மாதம் 5ஆம் தேதி சரக்கு விமானம் மூலம் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
கடத்தல் விவகாரத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் சுவப்னா சுரேஷுடன் தொடர்பில் இருந்த சபாநாயகரை நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.