தாவன்கெரே: கர்நாடக போலிஸ் படையில் இடம்பெற்றுள்ள துப்பறியும் நாயின் துப்பறியும் திறனைப் பாராட்டி விழா நடத்தப்பட்டது. அந்த ஒன்பது வயது நாயின் பெயர் துங்கா.
பிறந்த குட்டியாக போலிஸ் படையில் சேர்க்கப்பட்ட துங்கா இந்த ஒன்பது ஆண்டுகளில் 30 கொலைகள் உள்ளிட்ட 60 வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்கப் பேருதவி புரிந்ததாக கர்நாடக மாநில துணைத் தலைமை போலிஸ் அதிகாரி டாக்டர் அமர் குமார் பாண்டே தெரிவித்தார்.
இவற்றுள் 25 திருட்டுச் சம்பவங்கள் 5 கூட்டுக்கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் ஆகியனவும் அடங்கும்.
குறிப்பாக அண்மையில் சந்தேபென்னூர் போலிஸ் கட்டுப்பாட்டு எல்லைக்குட்பட்ட சாந்திசாகர் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற படுகொலையில் மர்மம் நீடித்தது.
துங்காவை ஈடுபடுத்தியபோது பல கிராமங்கள் வழியாக மூன்றே முக்கால் மணி நேரம் 11 கிலோ மீட்டர் தூரம் ஓடி குற்றவாளியின் தடயத்தைக் கண்டறிந்தது. அதன் மூலம் துப்பு துலங்கியதால் போலிசார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

