கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மின்சாரக்கட்டணத்தைக் கணக்கிடுவதிலும், கட்டணத்தை வசூலிப்பதிலும் நாடு முழுவதும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
மின் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதனால் சில சமயங்களில் மின்வாரியத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஆங்காங்கு கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் இருவர் அலதுர்கம் என்ற கிராமத்தில் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை வசூலிக்கச் சென்றனர்.
அந்த கிராம மக்களிடம் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராம மக்களில் சிலருக்கும், மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின் கட்டணம் வசூலிக்கச் சென்ற மின் வாரியத்துறை அதிகாரிகள் இருவரையும் அங்கு இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலிசார் அதிகாரிகளை விடுவித்தனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐவரைக் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.