இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் வி.கே. மோங்கா, கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 30,000 தாண்டி பதிவாகி வருவதாகவும், இது மிகவும் மோசமான நிலை என்றும் வேதனை தெரிவித்தார்.
தற்போது கிராமங்களிலும் அதிகளவில் பரவி வருவதாகக் கூறிய அவர், அது மிகவும் மோசமான நிலவரம் எனவும் பரவலைத் தடுப்பது இன்னும் சிரமம் என்றார்.
இந்தச் சூழலில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல இரண்டு வழிகள்தான் உள்ளன என்று கூறியுள்ளார். அவை:
1. 70% வரையிலானவர்களுக்கு கொவிட்-19 ஏற்பட்டு, பின்னர் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது;
2. கொவிட்-19 தடுப்பு மருந்து
கொவிட்-19க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி மனிதர்களிடையே எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது, அக்கறைக்குரிய மற்றொரு அம்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.


