ஹைதராபாத்: கொரோனா ஊரடங்கு காலத்தில் மின்சாரக்கட்டணத்தை கணக்கிடுவதிலும், கட்டணத்தை வசூலிப்பதிலும் நாடு முழுவதும் மின்துறையில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
மேலும், மின் கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சில சமயங்களில் மின்வாரியத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் இருவர் தங்கள் பணி எல்லைக்கு உள்பட்ட அலதுர்கம் என்ற கிராமத்தில் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை வசூலிக்கச் சென்றனர்.
அந்த கிராம மக்களிடம் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராம மக்களில் சிலருக்கும் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின் கட்டணம் வசூலிக்க வந்த மின் வாரியத்துறை அதிகாரிகள் இருவரையும் அங்கு இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அதிகாரிகளை மீட்டனர். மேலும், இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.