ஈரோடு: கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர் சங்கத்தின் இளம் மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் அபுல் ஹாசன் இத்தகவலைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இதுவரை 1,350 மருத்துவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மருத்துவர்களில் சிலர் நீரிழிவு, இதய நோய், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சேவை நோக்குடன் கொவிட்-19 நோயாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு பணியில் ஈடுபட்டனர்.
“அதன் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இறந்த அனைத்து மருத்துவர்களும் நல்ல அனுபவமும் திறமையும் உள்ளவர்கள். அவர்களின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு,” என்றார் அபுல் ஹாசன்.
மருத்துவர்களின் நலன் கருதி, அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் முழு கவச உடை தரமாக இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.