அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்தத் தகவலை கோவிலின் வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். பூமி பூஜையில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலின் முதன்மை வடிவமைப்பாளரான சோம்புராவின் மகன் நிகில் சோம்புரா ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், கடந்த 1988ல் இந்த கோவிலின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது என்றார். இது தயாரிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
“பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு கோயிலின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டது.
“இந்த திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி, கோயிலின் உயரம் 141 அடியிலிருந்து, 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“முந்தைய வடிவமைப்பின் அடிப்படையில் செதுக்கப்பட்ட அனைத்து தூண்களும், கற்களும் தற்போது பயன்படுத்தப்படும். புதிதாக இந்த இரண்டு மண்டபங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகள் சுமார் 3.5 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எல்&டி நிறுவனப் பணியாளர்கள் கட்டுமான இடத்தைப் பார்வையிட்டனர். 40 கிலோ எடையிலான வெள்ளி செங்கல் கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.