அண்மையில் தமிழகத்தின் சாத்தான்குளத்தில் போலிசாரால் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று, முகக்கவசம் அணியாததால் கைது செய்யப்பட்ட இளையர் ஒருவர் போலிஸ் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்த சம்பவம் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.
சீராலா நகரைச் சேர்ந்த ஒய்.கிரண்குமார் என்ற அந்த இளையரை போலிசார் கடுமையாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து குண்டூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது குடும்பத்திற்கு அரசாங்கம் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. போலிஸ் காவலில் இருந்தபோது மரணம் என போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.