கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு, அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியுட் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் ‘கொவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000ஐவிட குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நகரங்களில் இந்தத் தடுப்பூசி பரிசோதிக்கப்படுகிறது என்று இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறியுள்ளார்.
இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கொவிஷீல்டு’ தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை அடுத்த மாதம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரிசோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 300 மில்லியன் பேருக்கு செலுத்தும் அளவிலான தடுப்பு மருந்தைத் தயாரிக்க அந்த நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 60 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் திறன் பெற்றிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.