சென்னை: ஒவ்வொரு நாளும் 'தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு' என்று குறிப்பிட்டு கூறும் அளவுக்கு கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், அச்சத்துடன் பொழு தைக் கழிக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்ட உள்ளது. பலி எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 6,785 பேரிடம் இந்த தொற்று பரவி, புதிய உச்சம் தொட்டது. இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், ெவள்ளியன்று ஒரேநாளில் கொரோனாவால் 88 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 6,729 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 56 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
"தொற்றால் பாதிக்கப்பட்ட 6,785 பேரில் 1,299 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது.
"மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 199,749 பேர் கொவிட்-19 தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழகம் எங்கும் 114 ஆய்வகங்கள் உள்ளன.
"இந்த ஆய்வகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 65,150 மாதிரிகளைப் பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
"இதுவரை கிருமிப் பரவலால் 121,389 ஆண்களும் 78,337 பெண்களும் 23 மூன்றாம் பாலினத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இத்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 143,297ஆக உள்ளது," என்று தெரிவித்துள்ளது.

