அமராவதி: ஆந்திராவில் கொவிட்-19 நோயைக் கண்டறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் போலி முகவரியைக் கொடுத்து ஏமாற்றுவது தெரியவந்துள்ளது.
இதனால் நோய் இருப்பது உறுதியாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது பெரும் பிரச்சினையாக மாறிவருகிறது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்திராவில் தற்போது கிருமித் தொற்றால் தினமும் ஏழாயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அண்மைய சில தினங்களாக தினமும் 60 பேர் வரை உயிரிழக்கிறார்கள்.
இதையடுத்து பலர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர்.
அவ்வாறு முன்வருபவர்கள் மருத்துவமனைகளில் போலி முகவரியையும் தொலைபேசி எண்களையும் கொடுப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நோய்த்தொற்று இருப்பது உறுதியான பிறகும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாய் உள்ளது.
திருப்பதியில் மட்டும் இவ்வாறு போலி முகவரி தந்துள்ள 236 பேரை போலிசாரும் நகராட்சி அதிகாரிகளும் தேடிவருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இப்பிரச்சினை இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. அண்டை மாநிலமான தெலுங்கானாவும் இதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
அங்கு போலி முகவரி கொடுத்து பரிசோதனை செய்துகொண்ட ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருவதாக தெலுங்கானா ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மாநிலங்களுக்கும் இப்பிரச்சினை புது தலைவலியாக மாறியுள்ளது.

