புதுடெல்லி: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாக உள்ள போதிலும், பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்
கிழமையான நேற்று தனது 67வது வானொலி உரை நிகழ்ச்சியில் பேசினார்.
அந்த உரையில், "கொரோனாதொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் வேறு சில நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் அதிகமாகவே உள்ளது.
"அதுபோல் நம் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பெரும்பாலான நாடுகளைவிடக் குறைவுதான்.
"ஒரே ஒரு உயிரிழப்புகூட வருத்தமானதுதான் என்றாலும் கொரோனாவில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
"நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருவதால், மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படவேண்டியது அவசியம்.
"வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக விலகலைப் பின்பற்றிச் செயல்
படுவதைத் தொடர்ந்து கடைப்
பிடிக்க வேண்டும்.
"முகக்கவசம் அணிவதால்
மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாகவும் அசௌகரியமாக இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். அதனால் வெளியே செல்லும்போது முகக்கவசத்தை அடிக்கடி கழற்ற வேண்டும் என்று தோன்றக்கூடும்.
"ஆனால், அவ்வாறு முகக்கவசத்தைக் கழற்றும் முன், கொரோனா போர் வீரர்களான மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்
களைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர்களின் அர்ப்பணிப்பான பணியையும் நினைத்து பார்த்தபின் முகக்கவசத்தைக் கழற்றுவதைப் பற்றி யோசியுங்கள்.
"பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் இந்தக் கொரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி, அதன் உற்பத்தியை அதிகப்படுத்துவது பாராட்டுக்குரியது.
"நம் தேசத்தை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம், தற்சார்பு பொருளாதார நாடாக மாற்றுவோம் என சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்," என்று மோடி பேசினார்.

