புதுடெல்லி: கொவிட்-19 தொற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ‘ஆன்டிஜென்’ சோதனைகளில் தொற்று இல்லை என்று அறியப்பட்ட நோயாளிகளில் அதிக விழுக்காட்டினருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இரண்டு பெரிய ஆய்வகங்களின் தரவுகள், ஆன்டிஜென் சோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்று அறியப்பட்ட 65 விழுக்காட்டு நோயாளிகளுக்குப் பின்னர் ஆர்டி-பிசிஆர் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தெரிவிக்கின்றன.
விரைவாக முடிவுகளைக் காட்டும் ஆன்டிஜென் பரிசோதனையில் இதுபோன்ற தவறான முடிவுகள் இருப்பதற்கான அபாயத்தை இந்த வேறுபாடு அடிக்கோடிட்டு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
113 மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50,000 பேரைப் பரிசோதிக்கும் தமிழகம், ஆர்டி-பிசிஆரைத் தொற்றைக் கண்டறிய உதவும் ஒரே கருவியாக நம்புவதற்கு இந்த வேறுபாடே காரணமாகும் என்றும் கூறப்படுகிறது.