திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளிக்குட்பட்ட மகல்ராஜுவரி பள்ளி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வி நாகேஷ்வர ராவ், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு டிராக்டருக்கு வாடகை செலுத்த முடியாமல் தனது இரு மகள்களை வைத்து ஏர் உழுதார். இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக வெளியாயின.
இதனை அறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூட் தமது டிவிட்டரில், வயலில் உழவு செய்வதற்கு உதவியாக அந்த விவசாயி நாகேஷ்வர ராவுக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிப்பதாகவும் தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.
ஆனால், உழவுமாடுகளுக்குப் பதிலாக நடிகர் சோனு சூட் புதிதாக டிராக்டர் வாங்கித் தந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நாகராஜை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு சோனு சூட் பேசினார்.
இந்நிலையில், விவசாயிக்கு புதிய டிராக்டர் அனுப்பிவைத்து உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், "இரண்டு மகள்களின் கல்விக்குப் பொறுப்பேற்று, அவர்
களின் கனவு நனவாக உதவி செய்வேன்," எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அந்தக் குடும்பம் உழவு மாடுகள் அல்லது டிராக்டர் வாங்க சிரமப்படவில்லை என்றும் பழைய நினைவுகளை பொழுதுபோக்காக செய்துகாட்டியதாகவும் தாம் விசாரித்த வகையில் இது தெரிய வந்ததாகவும் கேவி பள்ளி மண்டல வளர்ச்சி அதிகாரி எஸ். மனோகர் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் கூறினர்.

