கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இறுதிக்கட்டச் சோதனை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இம்மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்படும் என மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இது ஒரு முக்கியமான கட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு மற்றும் அதன் கூட்டு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா முயற்சியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்ட சோதனைகளில் சாதகமான முடிவுகளைத் தந்துள்ளது.
இதையடுத்து ஆக்ஸ்போர்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இம்மருந்தை இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவாகி உள்ளது.
இந்தியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் நாட்டிற்குள் அதுகுறித்த தரவுகளை வைத்திருப்பது அவசியம் என ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
“உயிரி தொழில்நுட்பத் துறை இப்போது மூன்றாம் கட்ட மருத்துவ தளங்களை அமைத்து வருகிறது. நாங்கள் ஏற்கெனவே அவற்றில் வேலை செய்யத் தொடங்கி விட்டோம். இப்போது ஐந்து தளங்கள் 3ஆம் கட்ட சோதனைகளுக்குத் தயாராக உள்ளன.
“இந்திய உயிரி தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு உற்பத்தியாளருடனும் நெருக்கமாக செயல்படுகிறது. மேலும் சீரம் நிறுவனத்தின் 3ஆம் கட்ட சோதனை முக்கியமானது,
“ஏனெனில் தடுப்பூசி வெற்றிகரமாக இருக்க வேண்டும், அது இந்திய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றால் நாட்டிற்குள் தரவை வைத்திருக்க வேண்டும்,” என்று ரேணு ஸ்வரூப் மேலும் தெரிவித்துள்ளார்.