ஒன்றரை மில்லியன் பேர் பாதிப்பு; மரண எண்ணிக்கை 33 ஆயிரம்

ஒன்றரை மில்லியன் பேர் பாதிப்பு; மரண எண்ணிக்கை 33 ஆயிரம்

2 mins read
ed418981-96a7-45be-99c3-61ef2a9956bd
காஷ்மீரில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறவிகளும் யாத்ரிகர்களும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனை முன் காத்திருக்கின்றனர். படம்: ஊடகம் -

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக மேலும் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33,425ஆக அதிகரித்துள்ளது.

எனினும் நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்பது ஆறுதல் தரும் தகவல்.

இதையடுத்து தற்போது குணமடைந்தோர் விகிதம் 64.23 விழுக்காடாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை சுமார் 4.96 லட்சம் என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 9.5 லட்சம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து ஆறு நாட்களாக தினந்தோறும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகின்றனர்.

பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு மொத்தம் 1.48 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 13,656ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் மட்டும் மொத்தம் 11,904 பேர் சிகிச்சையில் உள்ளனர், பலி எண்ணிக்கை 3,827ஆக உள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1.73 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறாயிரத்தை எட்டிப்பிடிக்க...

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கால அளவு தேவைப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

கர்நாடகாவில் 11 நாட்களிலேயே கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்ந்தது. ஆந்திராவில் இதற்கு 7 தினங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட இதைவிட அதிக காலம் ஆனது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.