புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக உயர் செயல்திறன் உள்ள மூன்று கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
கோல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் இந்த மையங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தினமும் சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளை செய்யும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும் இதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க இயலும் என்றும் அவர் கூறினார்.
"இந்த மூன்று உயர் செயல்திறன் மிக்க மருத்துவப் பரிசோதனை மையங்களில் பரிசோதனைக்கான நேரம் வெகுவாகக் குறைந்திருக்கும்.
"மேலும் ஆய்வக அலுவலர்களுடன் தொடர்பில் இருக்கும் நேரம், மருத்துவ உபகரணங்களின் அருகில் இருக்கும் நேரம் ஆகியவையும் குறையும்.
"கொவிட்-19 அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகளும் இந்த மூன்று ஆய்வகங்களில் உள்ளன. இதனால் மக்கள் பெருமளவு பயனடைவர்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

