ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் பட்டறையில் பாரந்தூக்கி கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை ஹிந்துஸ்தான் கப்பல் பட்டறையில் நிகழ்ந்தது. எடை தாங்காமல் 75 மெட்ரிக் டன் எடையுள்ள அந்த கனரக பாரந்தூக்கி கவிழ்ந்ததாக தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கூறினார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் படையினர் விரைந்து வந்து நேற்று மாலை வரை மூன்று சடலங்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிலரையும் அவர்கள் மீட்டனர்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட பாரந்தூக்கியில் எடை சரிபார்ப்பு நடந்துகொண்டிருந்த வேளையில் திடீரென அது கவிழ்ந்ததாகக் கூறப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் மீது அந்த 60 அடி உயர பாரந்தூக்கி விழுந்ததில் பலரும் அந்த இடத்திலேயே நசுங்கி மாண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.