கள்ளச்சாராயம் குடித்த பலர் சுருண்டு விழுந்து மடிந்தனர் சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை யில் இருந்தோரில் 23 பேர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து விட்டது.
கொரோனா கிருமித்தொற்று பரவல் காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மது பிரியர்கள் போதைக்காக வெவ்வேறு வகையான பொருட்களை நாடி வருகின்றனர். கிருமி நாசினி திரவத்தைக் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) கள்ளச்சாராய விற்பனை நடந்தது. அந்த சாராயத்தை வாங்கிக் குடித்த மட்சல், டாங்கரா கிராமங்களைச் சேர்ந்த பலர் மயங்கி விழுந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சாராயத்தில் நஞ்சு கலந்திருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. மறுநாளும் அடுத்தடுத்து பலர் இறந்தனர். வெற்றிக்கிழமை 19 பேரும் நேற்று 23 பேரும் மாண்ட நிலையில் மரண எண்ணிக்கை 64க்கு உயர்ந்தது.
இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அம்ரேந்தர் சிங் கூறினார். சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நேற்று இரவு வரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல்விந்தர் கோர் என்னும் பெண்ணும் அடங்குவார். கள்ளச்சாராயத்தை அவரது கணவரும் குடித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐந்து தனிப்படை போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 40 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு கள்ளச்சாராய வியாபாரிகள் சிக்கினர்.பல இடங்களில் சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த ஊறல்களை போலிசார் கைப்பற்றி அழித் தனர்.