புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 29ஆம் தேதி டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே புதிய கல்விக்கொள்கை வரைவுக் குழு தலைவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வியை கற்பிக்க வேண்டும் என கொண்டு வந்திருக்கிறோம். இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்கள்தொகை 15 அல்லது 16 விழுக்காடுதான். அது பெரிய எண்ணிக்கை அல்ல.
“குழந்தைகள் பிறந்தது முதல் வெளியுலகத் தொடர்பை தாய்மொழியில்தான் மேற்கொள்கின்றன. இதன் காரணமாக, உள்தொடர்புக்கு தாய்மொழியில் பதிலளிக்கும் மூளையின் செயல்திறன், வேறு எதையும்விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“ஒரு குழந்தை மற்றொரு வெளிநாட்டு மொழியின்மூலம் செயல்படுவதைவிட அதன் தாய்மொழியின் மூலம் புதிய யோசனைகள், புதிய அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுக்கொள்வது என்பது மிகவும் இயல்பானது. எனவேதான் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்விக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். இது நீங்கள் ஆங்கிலம் கற்பதை தடை செய்யாது. அதை கவனித்துக்கொள்ளவும் ஏற்பாடுள்ளது,” என்று அவர் கூறினார்.