14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்; பொய்யான தகவல் அளிப்பது குற்றம்
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் தங்களைக் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து விமானப் பயணிகளும் கண்டிப்பாக ‘ஆரோக்கிய சேது’ செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து விவரங்களைக் குறிப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை பல லட்சம் பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி முதல் இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா திரும்பும் அனைவரும் தாங்கள் தற்போதுள்ள நாட்டில் இருந்து புறப்படும் முன் 72 மணி நேரத்துக்கு முன்பாக, சுயவிவரக் குறிப்பு விண்ணப்பத்தை (newdelhiairport.in) என்ற இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அனைத்து பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாகும். இதில் 7 நாட்கள் பணம் செலுத்தித் தனிமைப் படுத்திக்கொள்ளும் வசதி உண்டு. அந்த ஏழு நாட்களில் நடத்தப்படும் பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லாவிட்டால், வீடு திரும்பி அங்கு ஏழு நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
“கர்ப்பிணிப் பெண்கள், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நேர்தலால் வருவோர், முதியோர், தீவிர உடல்நலப் பிரச்சினை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வருவோர் மட்டுமே வீட்டுக்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்,” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணிகள் இந்தியா வந்தபின் பணம் செலுத்தி தங்கும் விடுதியில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விதிவிலக்கு கோரமுடியும் என்று குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, பயணம் செய்வதற்கு 96 மணிநேரத்துக்கு முன்பே பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டதற்கான ஆதாரத்தை பயணி அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும், பரிசோதனையின் முடிவு கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பயணி அளிக்கும் அறிக்கை பொய்யானதாக இருந்தால், அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விமானம் அல்லது கப்பலில் புறப்படும் முன் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படும்போது தொற்று அறிகுறிகள் இல்லாதோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.