மும்பை: மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. மும்பையையொட்டி உள்ள சாண்டா குரூஸ், கிங்ஸ் சர்க்கல் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பேருந்துகள், கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. மும்பையின் வாழ்வாதாரமான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
பாந்த்ரா, சர்ச்கேட் பகுதிகளுக்கு இடையிலான உள்ளூர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள அலுவலகங்கள், கடைகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது. மும்பையில் கடலோரப் பகுதிகளிலும் தண்ணீர் புகும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.