மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு, மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகர் எங்கும் வெள்ளக்காடாக மாறி யது. ரயில், பேருந்து போக்குவரத்துகளும் முடங்கின. தாதர், ஹிந்த்மடா, பெண்டி பஜார் உட்பட பல்வேறு நகரங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இந்நிலையில், மும்பை, வகோலாவில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, தோபிகாட் பகுதியில் சாக்கடை கால்வாய் ஓரம் கட்டப்பட்டு இருந்த மாடி வீடு ஒன்று நேற்று முன்தினம் காலை இடிந்து விழுந்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வந்த 28 வயது தாயும் அவரது 2 வயது முதல் 6 வயது வரையிலான மூன்று குழந்தைகளும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். இரண்டு வயது பெண் குழந்தையும் தாயும் பிணமாக மீட்கப்பட்டனர். 5 வயது குழந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு வயது மூத்த பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.