புதுடெல்லி: இந்தியாவில் நாளும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் மொத்த எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் உயிரிழந்தோரின் அளவு தற்போது 2.10% ஆக சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு போடப்பட்டது முதல் பதிவாகியுள்ள மிகக் குறைந்த அளவு இது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“இந்தியாவில் இதுவரை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,08,254 ஆக உயர்ந்து, 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
“இவர்களில் 68% ஆண்கள். 32% பெண்கள்.
“இறந்தவர்களில் பாதிப் பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர். 37% 45-60 வயதினர். 11% 26-44 வயதினர். இதுவரை 12,82,215 பேர் குணம் அடைந்துள்ளனர்,” என்று ராஜேஷ் பூஷண் கூறினார்.