சீனாவைச் சேர்ந்த மேலும் சில கைபேசிச் செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதி மோதல்களின் விளைவாக ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் மொத்தம் 59 கைபேசி செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த ராணுவ மோதல்களில் கிட்டத்தட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜூன் 29ஆம் தேதியன்று விதிக்கப்பட்ட கைப்பேசி செயலித் தடையைத் தொடர்ந்து இந்திய பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனா திருடி விநியோகம் செய்திருப்பதாக இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவின் நடவடிக்கை குறித்து சீனா “மிகுந்த அக்கறையுடன்,” இருப்பதாக அதன் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சாவ் லிஜியென் தெரிவித்தார்.
இவ்வாரம் செவ்வாய்க்கிழமையன்று இந்திய அரசாங்கம் சீனாவின் மேலும் சில செயலிகளைத் தடை செய்திருக்கிறது. அந்தச் செயலிகளின் பெயர் என்ன என்பதை இந்தியா வெளியிடவில்லை.
தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட செயலிகளில் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டோக், அலிபாபாவின் யூசி பிரௌசர், டென்டன்ட்டின் வீசெட், ஷேர்ரிட், அழகு செயலி மெய்டூ, இணைய வர்த்தக செயலியான ஷெனின் உள்ளிட்டவை அடங்கும்.
புதிதாகத் தடை செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்ரிட் லைட், பிகோ லைவ் லைட் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த வாரத்தின் தடை குறித்து பேசிய இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் ஜி ரோங், “ சீன முதலீட்டாளர்கள் உட்பட, இந்தியாவிலுள்ள அனைத்துலக முதலட்டாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இணக்கம் பரஸ்பர நன்மையை அளிக்கும்,” என்றார்.