புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு மில்லியனை நெருங்கிஉள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி புதன்கிழமை ஒரே நாளில் புதிதாக சுமார் 56 ஆயிரம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்வழி பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,964,536 பேராக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 595,501 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 1.32 மில்லியன் பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை சுமார் 40 ஆயிரம் பேரை காவு வாங்கி உள்ளது கொவிட்-19 நோய். இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 22 மில்லியன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
குணமடையும் விகிதம் 67.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மறுபக்கம் இறப்பு விகிதம் 2.09 விழுக்காடாகக் குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் 6.19 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்களையும் சேர்த்து 1,366 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன.
கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களில் 68 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் 32 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினர் என்றும் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 37 விழுக்காட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.