புதுடெல்லி: இந்தியாவின் மத்திய அரசு வகுத்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க, விடுதலைச் சிறுத்தை, . உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து மத்திய கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. ‘தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார்.
இது பற்றிய விவாதங்களை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இது ஓர் ஆரோக்கிய விவாதம் என்று கூறியுள்ளார்.
“நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளை சேர்ந்த மக்கள் தங்களது கருத்துகளை முன் வைக்கின்றனர். கொள்கையை மறுஆய்வு செய்கின்றனர். எந்த அளவுக்கு அலசி ஆராயப்படுமோ அந்த அளவுக்கு நாட்டின் கல்வி திட்டத்திற்கு பலன் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாற்ற சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்தியாவை வலுவான நாடாக ஆக்க புதிய கல்விக் கொள்கை உதவும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.