மூணாறு: கேரளாவில் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் 24 பேர் பலியாகிவிட்டார்கள். மேலும் சுமார் 50 பேரைக் காணவில்லை என்பதால் மீட்புப் பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்றாலும் அங்கு பருவநிலை காரணமாக நேற்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் மேலும் இரண்டு நாட்களுக்கு கடும் மழை தொடரும் என்பதால் மண்ணில் புதைந்துள்ளவர்களை மீட்பது சவாலாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பேய்மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.
தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திடீரென பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்கள் குடும்பத்தோடு மண்ணில் புதைந்தனர்.
மூணாறு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழர்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அருகிலேயே குடியிருப்புப் பகுதியும் இருக்கிறது.
பெட்டிமுடி என்ற பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு நிலச்சரிவில் சிக்கியது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்தன.
அதிகாலை நேரம் என்பதால் அந்த வீடுகளில் இருந்த சுமார் 78 பேரில் மூவர் மட்டுமே தப்பிச் சென்று இதர பகுதிகளில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
செய்தி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து கேரள முதல்வரின் உத்தரவுக்கு ஏற்ப, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர், போலிஸ் உள்ளிட்ட பலரும் மும்முர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 24 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. மரணமடைந்தோரில் பலரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
16 பேர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நிலச்சரிவு நிகழ்ந்த பெட்டிமுடி பகுதியில் எத்தனை பேர் வசித்து வந்தார்கள் என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது பெட்டிமுடி பகுதிக்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள்.
மூணாறு பஞ்சாயத்து யூனியனின் முன்னாள் தலைவர் ஆனந்த சிவன் என்பவரின் குடும்பம் மண்ணில் புதைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
மின்சாரம் இல்லாததும் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அரசு உதவித் தொகையும் அறிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்