கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோரின் எண்ணிக்கை 37க்கு உயர்ந்துள்ளது.
மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் வீடுகளும் மண்ணுக்குள் புதைந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இரவில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது அந்த வீடுகளுக்குள் இருந்தவர்களில் பெரும்பாலானோர் உறங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிலர் மேற்கூரை வழியாக வெளியேற முயன்றபோதும் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
தற்போது அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன. மேலும் 38 பேரைக் காணவில்லை.