புதுடெல்லி: ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் விமானிகளின் தவறான கணிப்புகள் காரணமாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
விமான ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்குவதில் தவறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
“சம்பவத்தன்று இரவு 7.37 மணிக்கு கடும் மழைப் பொழிவுக்கு மத்தியில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானிகளும் விமானத்தை தரையிறக்கினர். எனினும் துரதிர்ஷ்டவசமாக சரியான முறையில் அவர்கள் தரையிறக்காமல் போயிருக்கக்கூடும்.
“விமானிகளின் அறையில் உள்ள ஒலிப்பதிவுக் கருவி, விமான தரவுப் பதிவுக்கருவி ஆகியவற்றை மீட்டுள்ளனர். அவற்றை ஆய்வு செய்த பிறகே விமானிகள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து தெரியவரும்.
“மேலும் விபத்துக்கு முந்தைய பத்து நிமிடங்கள் என்ன நடந்தது என்பதும் உறுதியாகும்,” என்றார் அருண்குமார். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைத்ததை அடுத்து, அதை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.