விஜயவாடா: கொரோனா பராமரிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொவிட்-19 நோயாளிகளை தங்க வைக்கவும் சிகிச்சை அளிக்கவும் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை.
இதையடுத்து தங்கும் விடுதிகள், மக்கள் நல்வாழ்வு மையங்கள் ஆகியவற்றில் பலர் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும், மருத்துவர்களும் தாதியரும் வீடு திரும்புவதற்குப் பதிலாக தங்கும் விடுதிகளில் தற்காலிகமாக தங்குகின்றனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அங்கு 22 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் ஐந்து மணியளவில் இந்த விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகளை உடனுக்குடன் வெளியேற்ற சுகாதாரப் பணியாளர்கள் முயற்சி செய்தனர். எனினும் தீ வேகமாகப் பரவியதில் நோயாளிகள் உள்ளிட்ட பலர் சிக்கிக்கொண்டனர்.
ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து சில நோயாளிகள் கீழே குதித்து தப்பினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி பலரை மீட்டனர். எனினும் ஏழு நோயாளிகள் உட்பட 11 பேர் தீயில் கருதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
பலியானோர் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆந்திர அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கடந்த வாரம் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.