துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்புடைய பொருட்களை வாங்க இயலாது
புதுடெல்லி: தற்காப்புத்துறையுடன் தொடர்புள்ள 101 பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதையடுத்து பீரங்கி துப்பாக்கிகள், ரேடார் கருவிகளை இனி இந்தியா எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய இயலாது. இத்தகவலை தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார்.
'தற்சார்பு இந்தியா' திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.
கொரோனா கிருமி விவகாரம் முடிவுக்கு வந்ததும், 'தற்சார்பு இந்தியா' திட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புத் துறைக்காக இறக்குமதி செய்யப்படும் 101 பொருட்களுக்கு தடை விதிப்பதாக அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுடெல்லியில் நேற்று அறிவித்தார்.
'தற்சார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டிலேயே தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டுமே தடைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெளிவுபடுத்தினார்.
"இந்த முடிவையடுத்து பீரங்கி துப்பாக்கிகள், இலகு ரக துப்பாக்கிகள், ரேடார் கருவிகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடையை 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும் என்று குறிப்பிட்ட அவர், அவற்றை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கும்போது சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உள்நாட்டிலேயே பெற முடியும் என சுட்டிக்காட்டினார்.
தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை நடப்பாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2025ஆம் ஆண்டு வரை படிப்படியாக அமல்படுத்தப்படும்.
கடந்த 2017 ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுடன் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்களுக்கு இந்தியா பிற நாடுகளை எந்தளவு சார்ந்துள்ளது என்பது தெரியவந்தது.

