புதுடெல்லி: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் சுமார் 64 ஆயிரம் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரே நாளில் 861 பேரை கொவிட்-19 பலி வாங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.15 மில்லியனாக அதிகரித்துள்ளது. சுமார் 43 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் 1.42 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குணமடைந்தோர் விகிதம் 68.32 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் 20.33 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், இறப்பு விகிதம் 2.04 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதற்கிடையே கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உள்ள காய்கறிக் கடைக்காரர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா கிருமித்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.