புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் உலக நாடுகளை அடுத்தடுத்து முந்தி வருகிறது இந்தியா. அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசிலை தற்போது இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கடந்த ஐந்து தினங்களாக இந்தியாவில் அன்றாடம் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று சுமார் 58 ஆயிரம் பேரும் பிரேசிலில் சுமார் 50 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்தியாவில் கடந்த சில தினங்களாக புது நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து வருகிறது.
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை பத்து லட்சம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை 17ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது.
பின்னர் ஜூலை 31ஆம் தேதி இந்த எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்தது. ஆகஸ்ட் 8ஆம் தேதி நாட்டில் 21 லட்சம் பேர் கொவிட்-19 நோய்க்கு ஆளானதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 7.19 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு நிமிடமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐநூறு பேரிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றும், இதுவரை 2.41 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை 2.21 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44,386 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1.53 மில்லியன் பேர் குணமடைந்துள்ள நிலையில், சுமார் 6.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு கிருமித்தொற்று
இந்நிலையில் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகமான அறிகுறிகள் தென்படாததால் அவர் தம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
84 வயதான பிரணாப் முகர்ஜி, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோதே அவருக்கு கொரோனா கிருமி தொற்றியது கண்டறியப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.