திருவனந்தபுரம்: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தரையிறக்கிய வேகத்தில் மீண்டும் அதை மேலே கொண்டு செல்ல விமானிகள் முயற்சி செய்திருக்கலாம் என முன்னாள் விமானிகள் சிலர் கருதுவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் சரியான முறையில் தரையிறங்கவில்லை எனக் கருதும் பட்சத்தில், கடைசி நேரத்தில் அதை மீண்டும் மேலே கொண்டு செல்ல இயலும் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
விமானத்தின் இயக்கம் நிறுத்தப்படும் வரை தரையிறங்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாகக் கருதப்படாது.
“மழை காரணமாக சூழ்நிலை சாதகமாக இல்லாததால், விமானத்தை மீண்டும் மேலே கொண்டு சென்று, ஒருமுறை வட்டமிட்ட பின்னர் மீண்டும் தரையிறக்க முயற்சிக்கலாம் என்று விமானிகள் முடிவு செய்திருக்கலாம்.
“ஏனெனில் விமானிகள் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விமானத்தை மேலே கொண்டு செல்வதற்கான கருவிகள் அனைத்தும் அதற்கு தயார் நிலையில் உள்ளன,” என்று சுட்டிக்காட்டுகின்றனர் முன்னாள் விமானிகள்.
இதற்கிடையே கோழிக்கோடு விமான விபத்தின் போது காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்ய கேரள மக்கள் ஏராளமாகக் குவிந்தனர். விபத்தில் சிக்கிய பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு சிகிச்சையளிக்க ரத்தம் தேவைப்படுவதாக தகவல் பரவியது.
இதையறிந்த நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். கொட்டும் மழையில், கிருமித்தொற்று அச்சத்தையும் மீறி அவர்கள் கூடியிருந்தனர்.