மும்பை: பதினான்கு ஆண்டுகளுக்கு முன் ரயிலில் தவற விடப்பட்ட ‘பர்ஸ்’ அதன் உரிமையாளரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து உரிமையாளர் மும்பை ரயில்வே போலிசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் பதால்கர் என்பவர் கடந்த 2006ஆம் ஆண்டு மும்பையில் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது ரயில் நிலையத்தில் தனது ‘பர்ஸை’ தவறவிட்டார். இது தொடர்பாக அச்சமயம் ரயில்வே போலிசில் அவர் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு கால ஓட்டத்தில் இந்தச் சம்பவத்தை மறந்துவிட்டார் ஹேமந்த்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென ரயில்வே போலிசாரிடம் இருந்து இவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொலைத்த ‘பர்ஸ்’ கிடைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆச்சரியமடைந்த ஹேமந்த், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அண்மையில் ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது அவரது ‘பர்ஸ்’ ஒப்படைக்கப்பட்டது. அதில் தாம் வைத்திருந்த 300 ரூபாய் அப்படியே இருந்தது ஹேமந்தை மேலும் வியப்படையச் செய்தது.
“‘பர்ஸ்’ தொலைந்தபோது அதில் 900 ரூபாய் வைத்திருந்தேன். அதில் 300 ரூபாய் போக, தபால் செலவுக்காக நூறு ரூபாய் போலிசால் பிடித்தம் செய்யப்பட்டது.
“பழைய 500 ரூபாய் நோட்டை மாற்றிக் கொடுப்பதாகக் கூறினர். திரும்பக் கிடைத்தது பெரிய தொகை இல்லையென்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்துபோன ஒரு பொருள் கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்கிறார் ஹேமந்த்.