பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபரான சீனிவாச குப்தா தன் மனைவிக்காக ஆசையுடன் புது வீடு கட்டி வந்த நிலையில், விபத்து ஒன்றில் சிக்கி மனைவி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீடு கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் புதுமனை புகுவிழா நடைபெற்றது.
இதில் தன் மனைவி பங்கேற்க இயலாமல் போனதே என அவர் சோகத்தில் மூழ்கியபோது மெழுகுச் சிலை குறித்து கேள்விப்பட்டுள்ளார்.
இதையடுத்து தன் மனைவியைப் போலவே அச்சு அசலாக ஒரு மெழுகுச் சிலையை உருவாக்க ஏற்பாடுகளைச் செய்தார் சீனிவாச குப்தா.
மேசையில் அமர்ந்திருப்பது போன்றும், மனைவிக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு புடவையை அவர் அணிந்திருப்பது போன்றும் சிலை உருவானது. இதைக் கண்டு அவரது இரு மகள்களும் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
இதன் பின்னர் புதுமனை புகுவிழாவை உற்சாகத்துடன் நடத்தியுள்ளார் சீனிவாச குப்தா.
அந்த விழாவுக்கு வந்த அனைவரும் மெழுகுச் சிலையைக் கண்டு அவரது மனைவி உயிரோடு வந்துவிட்டதாகவே கருதி வியந்து போயினர்.
தற்போது சீனிவாச குப்தாவும் அவரது இரு மகள்களும் சிலையுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.