திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்துள்ள தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் குழு ஒன்று துபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகிய இருவரும் கைதாகியுள்ளனர். ஃபாசில் ஃபரீத் என்பவர் மீது வழக்குப் பதிவாகி உள்ள நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது.
தங்கக் கடத்தலில் கேரளாவின் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்குரிய ஆதாரங்கள் இன்னும் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஃபாசில் ஃபரீத் உள்ளிட்ட மூன்று பேரை விசாரித்தால் பல உண்மைகளும் ஆதாரங்களும் வெளிவரும் என அதிகாரிகள் நம்புவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தில் தொடர்புடைய அனைவரை பற்றியும் ஃபாசில் ஃபரீத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். அவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளாவில் பலர் சிக்குவார்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புலனாய்வு அதிகாரிகள் துபாயில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் 12 பேர் கைதாகி உள்ளனர்.