சென்னை: பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, ஆண் வாரிசுகளுக்கு வழங்குவது போலவே பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக் கல்லையும் தகர்த்து எறிந்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.