புதுடெல்லி: வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக மிக எளிமையானதாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேர்மையாக வரி செலுத்துவோர், நாட்டின் வரி வசூலிப்பு முறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இத்திட்டத்தை பிரதமா் மோடி நேற்று தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், உரிய நேரத்தில் வரி செலுத்துவோர், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் எனப் பாராட்டினார்.
நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்குள்ளதாகவும் நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நாட்டின் முக்கியக் கொள்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. நேர்மையாளர்களைப் பெருமைப்படுத்தும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும்.
“வரி முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்க அதிகரிக்கும்,” என்றார் பிரதமர் மோடி.
கடந்த ஆறு ஆண்டுகளில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை கோடி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே இந்தப் புதிய திட்டமானது நேரடி வரிகள் சீர்திருத்த பயணத்தை மேலும் முன்னெடுத்து செல்லும் என நிதி அமைச்சு கூறியுள்ளது.
வரி குறைப்பு மற்றும் நேரடி வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது ஆகியவையே வரி சீர்திருத்தங்களின் நோக்கம் என்றும் வருமானவரி கணக்கு தாக்கலுக்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.