புதுடெல்லி: பிரதமர் மோடி ஆட்சியில் எதுவும் சாத்தியமாகும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாட்டு நிலவரங்கள் குறித்து தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார் ராகுல். தற்போது பொருளாதார நிலை குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக இருக்கக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும், சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன் முறையாக மிகக் குறைவாக இருக்கக் கூடும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மத்திய அரசை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி ஹை மும்கின் ஹை’ என்ற முழக்கத்தை முன்னெடுத்தது பாஜக. இதற்கு ‘மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,’ என்று அர்த்தம்.
ஆனால் இந்த முழக்கத்தை பிரதமர் மோடி உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வெளிப்படுத்தி இருப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.
“மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,” என தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், அதனூடே இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தையும் இணைத்துள்ளார்.