பெங்களூரு: அண்மையில் பெங்களூருவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கலவரத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வன்முறையாளர்களிடம் இருந்து சேத அளவுக்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகேசி நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவரது உறவினர் ஒருவர் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து பொதுமக்களில் ஒரு எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டனர்.
அவரது உறவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடிக்க, எம்எல்ஏ வீட்டின் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இதனால் கலவரச்சூழல் ஏற்படவே, காவல்துறையினர் விரைந்து வந்து தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
எனினும் வன்முறையாளர்கள் எல்லை மீறியதால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஐம்பது போலிசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் சேதமடைந்த பொதுச்சொத்துகளுக்கான தொகை வசூலிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி இவ்வாறு தொகை வசூலிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் பொம்பை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.