புதுடெல்லி: இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ல் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.
“இது வெறும் வரைவுதான். இறுதி அறிக்கை அல்ல. மக்கள் கருத்து தெரிவிக்கவே இந்த வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரது கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன,” என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ராகுல் வலியுறுத்தி உள்ளார்.