புதுடெல்லி: இந்தியா இன்று 74வது சுதந்திர நாளை நாடு முழுவதும் கொண்டாடுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சுதந்திர நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.
இன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
சுதந்திர தினத்தன்று காலை 7.21 மணிக்கு பிரதமர் மோடி, செங்கோட்டை மைதானத்திற்கு வருகையளித்து 7.30 மணிக்கு கொடியேற்றி 45 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்.
இந்த நிலையில் கொரோனா கிருமித் தொற்று அச்சம் காரணமாக சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தின விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் விமான நிலையம், சென்னை விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு பகுதிகளிலும் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். ேமலும் டெல்லி முழுவதும் தீவிர வாகன சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஒத்திகையைத் தவிர வேறு எதற்கும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் களது வீட்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்றொரு பெரிய மாற்றமாக இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க மாட்டார்கள். 500 என்.சி.சி மாணவர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் சுதந்திர நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற விருக்கிறார்.

