புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மிகவும் ஆசையுடன் பலாப்பழம் கேட்டதாக அவரது அரசியல்வாதி மகனாகிய அபிஹிஜித் கூறியுள்ளார்.
“என்னை அழைத்து கொஞ்சம் பலாப்பழம் கொண்டு வா என்று கேட்டார். நான் உடனே கோல்கத்தாலிவிருந்து மீரட்டில் (மேற்கு வங்காளம் பிர்பும் மாவட்டம்) உள்ள கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 25 எடையுள்ள பழுத்த பலாப்பழத்தை எடுத்துக்கொண்டு ரயிலில் புறப்பட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி வந்து அவரை சந்தித்தேன். அவரும் சில பலாச் சுளைகளை எடுத்துச் சாப்பிட்டார். நல்லவேளை அப்போது அவரது சர்க்கரை அளவு அதிகரிக்கவில்லை. பலாப்பழங்களைச் சாப்பிட்டதும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஒரு வாரத்திற்குள் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது,” என்று புதுடெல்லியில் கிரேட்டர் கைலாஷ் வீட்டில் 60 வயது அபிஹிஜித் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது.
திரு பிரணாப் முகர்ஜியின் மூளையில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே ஏற்கெனவே அவர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அவர் கோமா நிலையில் உள்ளார்.
தற்காப்பு அமைச்சராக பிரணாப் முகர்ஜி பணியாற்றியதால் அவரது உடல்நிலை பற்றிய கோப்புகளை ராணுவ மருத்துவர்கள் பராமரித்து வருகின்றனர். இதனால் டெல்லியில் உள்ள ராணுவ ஆய்வு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
“மருத்துவமனைக்குச் சென்று அவரை நான்கு முறை பார்த்து உள்ளேன். கடைசியாக நான் அவரைப் பார்த்தபோது சுயமாக சுவாசித்துக்கொண்டு சாதாரண மாக இருந்தார்,” என்று அபிஹிஜித் மேலும் தெரிவித்தார். திரு பிரணாப் முகர்ஜியின், வயது 84, உடல் நிலையில் நேற்று மாலை வரை முன்னேற்றம் ஏற்படவில்லை.