புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 52 ஆயிரத்தைக் கடந்துவிட்டதால் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் கிருமித்தொற்றால் 314 பேர் உயிரிழந்துவிட்டனர். கஞ்சம் மாவட்டம் பெராம்புர் நகராட்சியில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அறிகுறியில்லா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் ஆசித் திரிபாதி கூறுகையில், 1897ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
"இதன்மூலம் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு குறிப்பிட்ட காலம் சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். சட்டசபையைக் கூட்ட முடியாததால் அவசரச் சட்டம் பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.
இந்த அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒடிசா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சூரிய பிரசாத் மிஸ்ரா "முகக்கவசம் அணியாத காரணத்திற்காக ஓர் ஏழையிடம் எப்படி 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க முடியும்?," என கேள்வி எழுப்பியுள்ளார்.

