தங்கக் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியிடம் ஐந்து மணி நேரம் விசாரணை
திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரனிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு போலிச் சான்றிதழ் மூலம் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவி கிடைக்க உதவியதாகவும், கடத்தல் கும்பலுக்கு கேரள தலைமைச் செயலகம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததாகவும் சிவசங்கரன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கலவர வழக்கில் கைதான இளையர் கிருமித்தொற்றால் உயிரிழந்தார்
பெங்களூரு: அண்மையில் பெங்களூருவில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சையட் நதீம் என்ற இளையர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி கைதான, 24 வயதான அவருக்கு சிறையில் இருந்த போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரி அதிரடிக் கைது
ஹைதராபாத்: 28 ஏக்கர் நிலம் தொடர்பான சர்ச்சையை முடித்து வைக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய்த்துறை அதிகாரி பாலராஜு என்பவரை தெலுங்கானா போலிசார் கைது செய்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை தனது வீட்டில் வைத்து வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
புதுவை: ஏழு ஆயிரம் பேர் பாதிப்பு
புதுவை: கொரோனா கிருமித்தொற்றால் புதுவையில் இதுவரை ஏழாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 53 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

