புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.64 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 பாதிப்பைக் கண்டறிய இதுவரை சுமார் 30 மில்லியன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது. மேலும் இறப்போர் விகிதமும் நன்கு குறைந்துள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றைக் கண்டறிய சுமார் 30 மில்லியன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இது ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரமாகும்.
கிருமித் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள நாட்டில் 1,469 ஆய்வகங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
"தினமும் பத்து லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது தினமும் எழு லட்சம் பரிசோதனைகள் என்ற அளவு எட்டப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் காரணமாக தொற்றுப் பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு விகிதமும் குறைந்துள்ளது," என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் 676,900 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 50,921 ஆக உள்ளது.
இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவில் 1.93 விழுக்காடாக உள்ளது என்றும் இது கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரம் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடக்க 23 நாட்கள் ஆன நிலையில் பிரேசிலில் 95 நாட்களானது. மெக்சிகோவில் கிருமித்தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து 141 நாட்களுக்குள் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
ஆனால் இதே மரண எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க இந்தியாவிற்கு 156 நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1.9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட் 19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இது நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 72.51 விழுக்காடாகும்.

