புதுடெல்லி: வட மாநிலங்களில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பீகார், அசாம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மேற்கு மாநிலங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் மழை வெள்ளத்தால் சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 16 மாவட்டங்கள் வெள்ளத்தால் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன.
அசாமில் உள்ள 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீண்டும் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் 20 மாவட்டங்களில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்திலும் 15 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 13ஆம் தேதியிலிருந்து கனமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
தென்மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுகிறது. வடகர்நாடகாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு தினங்களாக நீடித்து வரும் கனமழையால் கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

